Wednesday, October 28, 2009

காற்றில்...

கைத்தொலைபேசியில்
அவள் அழைப்பு
மெளனமாக அதிரும்போதெல்லாம்
மின்விசிறியின் காற்றில்
அசைந்து ஒலி எழுப்புகிறது
ஓயாமல் பேசும் அவள்
பரிசளித்த மணிக்கொத்து.
(c) veenaapponavan@yahoo.com

Sunday, September 20, 2009

நட்சத்திரக் குறியிட்ட தற்கொலைக் கவிதை

தற்கொலைக்கான உத்தேசம் இல்லையெனினும்
கவிதை பிடித்திருந்ததால்
அதன் பக்கத்தில் நட்சத்திரக் குறியிட்டு
பத்திரிகையை மூடி வைத்தேன்.
குளித்து விட்டு வந்தவுடன்
அதை எடுத்து
அந்தப் பக்கத்தில் இருந்த
இன்னும் இரண்டு கவிதைகளுக்கும்
நட்சத்திரக் குறியிட்டேன்.
அப்படியும் திருப்தி வராமல்
பக்கம் முழுதும் ஆங்காங்கு
நட்சத்திரம் வரைந்து
ஸ்டேப்ளர் பின்னுக்கு மேல்
ஒரு பிறை நிலவை வரைந்தேன்.
கீழே ஒரு மலைத்தொடர் இருக்க வேண்டும்
என்று தோன்றியது.
அதை வரைந்து
அப்புறம் கூட்டம் கூட்டமாக
மரங்களை வரைந்து
நடுவில் ஒரு நதியையும் ஓட விட்டேன்.
நிம்மதியாக வெளியே போனேன்.
இரவு மறுபடியும் அதைப் பிரித்தேன்.
மலைத்தொடர் மேலும்
மரங்களின் நடுவிலும்
குட்டி யானைகள்
நடந்து கொண்டிருந்தன.
அம்மா பள்ளிக்கூடத்தில் படித்த போது
வரையக் கற்றுக் கொண்ட யானைகள்.
(c) veenaapponavan@yahoo.com

Friday, September 18, 2009

எளிமையான நேரம்

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
வித விதமான கோணங்களில் அமைந்து
வேறு வேறு நேரங்களைக் காட்டும்
படங்கள் நிறைந்த புத்தகத்தைப்
பிரித்து வைத்து
மகளுக்கு நேரம் பார்க்க
சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்,
ரயில் பயணத்தின் போது.
குட்டி குட்டி இட்லிகளை
சாப்பிட்டு முடித்த மகளுக்கு,
இருப்பதிலேயே
எளிமையான நேரத்தில் இருந்து
ஆரம்பித்தாள்.
சின்ன முள் ஒன்பதிலும்
பெரிய முள் பன்னிரண்டிலும்
இருக்கும் படத்தைப் பார்த்த மகள்
ஒன்பது மணி, பன்னிரண்டு நிமிஷம்
என்று சொன்னாள்.
நேரம் பார்த்தலின் விதிகளை
அறிய முயன்ற களைப்பில்
சோர்ந்து உறங்கியவள்
கொஞ்ச நேரத்திலேயே
குட்டி இட்லி ஒன்பதிலும்
பெரிய இட்லி பன்னிரண்டிலும்
நிற்கும் கனவிலிருந்து விழித்து
குழப்பமாக உட்கார்ந்திருந்தாள்.

(c) veenaapponavan@yahoo.com

Thursday, September 03, 2009

மூக்கில்

சினிமாப் பத்திரிகையில் இருந்த
நடிகைகளின் மூக்கின் மேல்
வட்டப் பொட்டு
வரைந்து கொண்டிருந்த
சிறுமியை
மூக்கில் மச்சம் கொண்ட
அவள் அம்மா வந்து
அதட்டிக் கூட்டிப் போனாள்.

(c) veenaapponavan@yahoo.com

Thursday, August 13, 2009

ராதாநகர் வீடு

நாற்பது வருஷம் குடியிருந்த வீடு
இடிந்து விழுமோ என்ற பயத்தில்
புதுவீட்டுக்குக் குடிவந்தோம்
ஒரு மழை நாளில்.
தபால் நிலையத்தில் முகவரி மாற்றத்தைப்
பதிவு செய்துவிட்டு
ரேஷன் அட்டையையும் மாற்றிக் கொண்டோம்.
'அந்த வீடு' என்று சொல்லப்
பழகிக் கொண்டோம்.
'பழைய வீடு' என்றும் சொல்லலானோம்.
ரயில் நிலையத்தில் இருந்து
வீட்டுக்கு வரும் வழியில்
பழைய வீடு இருக்கும்
சந்தைப் பாராமல்
கட்டாயமாகத் தலை திருப்பி
விஷ்ணு பேக்கரியைப் பார்க்கவும்
பழகிக் கொண்டோம்.
அந்த வீட்டுத் தென்னைமரத்தில் காய்த்த
தேங்காய்கள் வந்தன அவ்வப்போது.
வாசலில் இருந்த வேப்பமரம்
மின்கம்பியை உரசுகிறது
என்று புகார் சொல்ல
சிலர் வந்தார்கள் ஒரு முறை.
போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது
ஒரு நாள் அதிகாலையில்
'அந்த வீடு அப்படியே கிடக்கிறதே'
என்று மெதுவாக ஆரம்பித்தாள் அம்மா.
'தானாக இடிந்து யார் மேலாவது
விழுந்து வைத்தால் என்ன செய்வது'
என்று கவலைப்பட்டாள்.
'சரி. சீக்கிரம் இடித்து விடலாம்.
அப்புறம் நிதானமாக கட்டிக்கொள்ளலாம்'
என்றேன்.
அந்த விடிகாலைக் குளிரில்
எங்கள் ராதாநகர் வீடு
வேப்பமரம் , தென்னைமரங்களுக்கு நடுவே
புதிதாகப் பெயர் வைக்கப்பட்ட
குழந்தையைப் போல
மெதுவாகப் புரண்டு படுத்தது.

(c) veenaapponavan@yahoo.com

Wednesday, August 05, 2009

போக்குவரத்தின் திசை

எதிர்பாராமல்
சாலையில் கடந்து போன
சித்தியைப் பார்த்த குழந்தை
ஆட்டோ உள்ளே இருந்து கூவுகிறாள்.
வண்டி நிற்குமுன்
ஆட்டோ பின்னால் இருக்கும்
சின்ன ஜன்னல் வழியாக
தன குட்டிக்கையை நீட்டி
சித்தியை அழைக்கிறாள்.
பரபரப்பான போக்குவரத்து
அவள் கை நீட்டும் திசையில்
சென்று மீள்கிறது ஒரு கணம்.
(c) veenaapponavan@gmail.com

Thursday, July 23, 2009

பாபு இறந்து விட்டார்

இரவு 9 மணி அளவில்
மின்வண்டி பல்லாவரத்தை நெருங்கும்போது
என் சக பயணிக்கு
அலைபேசியில் தகவல் வந்தது.
பாபு எறந்துட்டாரு என்று.
அவருடன் கூட வந்தவர்
மெதுவாகத் தலையை ஆட்டி
அந்தத் தகவலை ஏற்றுக் கொண்டார்.
அவர் மனைவி சேலைத் தலைப்பால்
தன வாயை மூடிக் கொண்டார்.
அவர்களின் பயணத் திட்டம் மாற்றப்பட்டு
அப்படியே அரசு மருத்துவமனைக்குப் போக
முடிவானது.
கையெழுத்து கிய்யெழுத்து போட்டு
பாடியை வாங்குவதற்குள் விடிந்து விடும்
என்றார் கூட வந்தவர்.
அலைபேசியில் சாந்திக்கும் சரவணனுக்கும்
தகவல் சொன்னார் முதலில்.
அப்படியே நைட் டியூட்டிக்குக்
கிளம்பிக் கொண்டிருந்த வேலுவை
கூட்டு ரோட்டுக்கு வந்து டாக்ஸி பிடித்து
கையோடு குமாரையும் கூட்டிக் கொண்டு
ஆஸ்பத்திரிக்கு வந்து விட சொன்னார்.
சாவியை முதலாளியிடம் கொடுத்து விட்டு
உடனே வருவதாக சொன்னான் வரதன்.
வேணியின் எண்
ஒலித்துக் கொண்டிருந்த இடைவேளையில்
'எவ்வளவோ அட்வைஸ் பண்ணேன். கேட்டாரா'
என்று சொன்னார் கூட வந்தவரிடம்.
சேகரிடம் கொஞ்சம் பணம் எடுத்து வரச் சொன்னார்.
இதற்கிடையே மதி அவரை அழைத்து
பாபுவைப் பற்றிக் கேள்விப்பட்டது
உண்மையா என்று விசாரித்தான்.
வேணி குடும்பத்துடன்
மொட்டை மாடியில் படுத்திருப்பாள்,
அவளுக்கு காலையில்
சொல்லிக் கொண்டால் போதும்
என்று முடிவானது.
பார்க் ஸ்டேஷன் வந்ததும்
எப்போதும் போல்
கூட்டத்தைத் தவிர்க்க
ரயில் நிற்கும் முன் இறங்கி ஓடாமல்
கூட்டத்துக்கு நடுவில் மெதுவாகப் போனேன்.
ஆறுதலாக இருந்தது.

(c) veenaapponavan@yahoo.com