நாற்பது வருஷம் குடியிருந்த வீடுஇடிந்து விழுமோ என்ற பயத்தில்
புதுவீட்டுக்குக் குடிவந்தோம்
ஒரு மழை நாளில்.
தபால் நிலையத்தில் முகவரி மாற்றத்தைப்
பதிவு செய்துவிட்டு
ரேஷன் அட்டையையும் மாற்றிக் கொண்டோம்.
'அந்த வீடு' என்று சொல்லப்
பழகிக் கொண்டோம்.
'பழைய வீடு' என்றும் சொல்லலானோம்.
ரயில் நிலையத்தில் இருந்து
வீட்டுக்கு வரும் வழியில்
பழைய வீடு இருக்கும்
சந்தைப் பாராமல்
கட்டாயமாகத் தலை திருப்பி
விஷ்ணு பேக்கரியைப் பார்க்கவும்
பழகிக் கொண்டோம்.
அந்த வீட்டுத் தென்னைமரத்தில் காய்த்த
தேங்காய்கள் வந்தன அவ்வப்போது.
வாசலில் இருந்த வேப்பமரம்
மின்கம்பியை உரசுகிறது
என்று புகார் சொல்ல
சிலர் வந்தார்கள் ஒரு முறை.
போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது
ஒரு நாள் அதிகாலையில்
'அந்த வீடு அப்படியே கிடக்கிறதே'
என்று மெதுவாக ஆரம்பித்தாள் அம்மா.
'தானாக இடிந்து யார் மேலாவது
விழுந்து வைத்தால் என்ன செய்வது'
என்று கவலைப்பட்டாள்.
'சரி. சீக்கிரம் இடித்து விடலாம்.
அப்புறம் நிதானமாக கட்டிக்கொள்ளலாம்'
என்றேன்.
அந்த விடிகாலைக் குளிரில்
எங்கள் ராதாநகர் வீடு
வேப்பமரம் , தென்னைமரங்களுக்கு நடுவே
புதிதாகப் பெயர் வைக்கப்பட்ட
குழந்தையைப் போல
மெதுவாகப் புரண்டு படுத்தது.
(c) veenaapponavan@yahoo.com