Saturday, March 28, 2009

மழை நிலா

மழையில்
நிலா பார்த்த
இரவில்
நிலவில்
மழை பெய்யும்
கனவொன்று
கண்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

Friday, March 27, 2009

மந்த்ராலயம்

1
--
காத்திருப்புகளால்
நெய்யப்பட்டிருக்கிறது
இந்தப் புண்ணியத்தலம்.

2
--
துங்கபத்ரையில்
பரிசல் ஓட்டுபவன்
'சுற்றி விடட்டுமா' என்று
பயணிகளிடம் கேட்டு
பரிசலை சுற்றி விடுகிறான்.
சுற்றி நிற்கும் வரை
கழியை வெளியே எடுத்துக்
காத்திருக்கிறான்.

3
--
இருநூறு வருஷங்களுக்கு முன்னால்
மலைக்குப் பக்கத்தில்
மண் பரப்பி வைத்துவிட்டுத்
தூங்கினார் பீமய்யா.
மலையில் இருந்து
அந்த மண்ணில் குதித்து
பாத அளவு கொடுத்துவிட்டுப்
போனான் அனுமன்.
பீமய்யாவின் பரம்பரையினர்
ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை
அனுமனுக்கு புது செருப்பு
செய்து கொடுத்து வருகின்றனர்.
இரவில் செருப்பு தேய
மலையில் அலைகிறான் அனுமன்.

4
--
காய்ந்த
வெற்று நிலங்களுக்கு அப்பால்
சூரியன் சிகப்பாக
மறைய ஆரம்பித்த போது
விடுதியைக் காலி செய்து விட்டு
புறப்பட்டேன்.
ரயில் நிலையத்துக்குப்
போகும் வழியில்
கான்க்ரீட் கூரைக்குக்
கீழிருந்த கோயில் மாடுகள்
மற்றுமொரு சூரிய அஸ்தமனத்தை
மங்கலாகப்
பார்த்துக் கொண்டிருந்தன.

5
--
காத்திருப்புகளால்
நெய்யப்பட்டிருக்கிறது
இந்தப் புண்ணியத்தலம்.

(c) veenaapponavan@yahoo.com

Thursday, March 26, 2009

தனிமையின் விளிம்பு

கிண்ணத்தில் அளந்து
தட்டில் கவிழ்க்கப்பட்ட
அளவுச் சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.

(c) veenaapponavan@yahoo.com